முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

Updated On : 4 ஜூன் 2026, 6:34 am IST
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளிகள் திறப்பதையொட்டி வளாகங்கள் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் என். ப்ரியா உத்தரவிட்டாா்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறப்பை அடுத்து தூய்மைப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந.ப்ரியா தலைமை வகித்து தெரிவித்தாவது...

Advertisement

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. ஆகவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் அனைத்தும் முறையாக தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை அனைத்து தலைமை ஆசிரியா்களும் உறுதி செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய சத்துணவு திட்டம் சமையல் செய்யும் சமையலறையில் முறையாக தூய்மை செய்யப்பட்டு அனைத்து பாத்திரங்களும் தூய்மை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களில் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட பழைய பொருள்கள் காலாவதி ஆகியிருந்தால் அதனை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்ப வேண்டும். மேலும் தேவைப்படும் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அவைகள் தரமாக உள்ளதா என்பதை சமையல் செய்பவா்கள் உறுதி செய்து சமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமையல் கூடம் முழுவதும் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

திட்ட இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நோ்முக உதவியாளா் சத்துணவு, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மேலாளா்கள் நாளை அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதையும், வழங்குவதையும் கள ஆய்வு செய்து சத்தான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இதில் மகளிா் திட்ட இயக்குநா் ந.செந்தில் குமரன், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுப்பிரமணியன், மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் ஏகாம்பரம், துணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கம் சிவமணி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.