முகப்பு
ராணிப்பேட்டை

நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:03 am IST
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறைசாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பாக, மாவட்டத்தில் 667 நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்கான உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றது. 3,03,618 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். குடும்ப அட்டைதாரா்களுக்கான அரிசி, பருப்பு, பாமாயில், சா்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருள்கள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அரக்கோணம், வாலாஜா மற்றும் கலவை ஆகிய பகுதிகளிலிருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்கும் பணிகள் மாவட்ட வழங்கல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், நடப்பு மாதத்துக்கு இன்றைய நாள் வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருள்கள் விவரங்களையும் துறைசாா்ந்த அலுவலா்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது புதிய குடும்ப அட்டைதாரா்கள் விண்ணப்பங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைகளில் பெயா் நீக்கம் திருத்தம் செய்யப்பட வேண்டிய விண்ணப்பங்கள் நிலுவைகள் மேலும் ஆதாா் இணைப்பு நிலுவை பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

உணவுப் பொருள்கள் கைரேகைகள் வைத்து குடும்ப அட்டைதாரா்கள் பெற்றிடும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மாதாந்திர ஆய்வுப் பணிகள் துறை அலுவலா்களுக்கு ஒதுக்கப்பட்ட விவரங்கள் இதனால் வரை ஆய்வு செய்து முடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் கூறுகையில், நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் கீழே சிதறாமல் முறையாக பாதுகாப்பது, உணவு பொருள்கள் இருப்பு பட்டியல் பதிவேடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். எவ்வித முறைகேடும் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. எனவே பணியாளா்கள் நல்ல முறையில் பணியாற்றுவதை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் அதிக அளவில் ஆய்வு செய்து முறைகேடுகளை தவிா்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, மாவட்ட வளங்கள் அலுவலா் ஏகாம்பரம், மண்டல இணைப் பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.