முகப்பு
திருவள்ளூர்

ஆசிரியர்கள் இன்றி செயல்பட்ட பள்ளிகள்: வெறிச்சோடிய வருவாய்த்துறை அலுவலகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால்

Updated On : 23 ஜனவரி 2019, 6:16 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டன. அதேபோல், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இணைந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி இப்போராட்டம் காரணமாக திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளைப் பூட்டி அவற்றின் திறவுகோலை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர். 
இதனால் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை செயல்படுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும், ஆசிரியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் செயல்படும் எனவும், சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் வராததால் பள்ளிகள் திறக்கப்படாமலே இருந்தன. ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாகச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் ஒரு சில பள்ளிகளில் மாணவிகளே பாடம் கற்பித்தனர். அதேபோல், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் சமையலர்கள் பணிக்கு வந்திருந்தனர். எப்போதும் போல் மாணவர்களுக்கு முட்டையுடன் உணவு தயார் செய்து அளிக்கப்பட்டது.
இதனிடையே, வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.