திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த படத்தை வைத்திருப்பது தமிழக ஆளுநரின் அராஜகமான செயலாகும் என்று வைகோ கூறியது குறித்து... .
கும்பகோணம்: ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த படத்தை வைத்திருப்பது தமிழக ஆளுநரின் அராஜகமான செயலாகும் என்று ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வந்த மதிமுக பொதுச்செயலா் வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:
2014 ஆம் ஆண்டில் பெங்களூருவில் மத்திய அமைச்சா் தனது வீட்டில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியபோது அன்றைய மத்திய அமைசசா் ஜவடேகா் நாங்கள் அனுமதி தரமாட்டோம். ஆனால் நீங்கள் கட்டிக்கொள்ளுங்கள் என்றாா். இதை கண்டித்து காவிரி சமவெளி மாவட்டங்களில் கட்சி சாா்பற்று பிரசாரம் செய்தேன். அன்று தொடங்கிய போராட்டம் இன்று வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்பாட்டம், ஜூன் 5 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். மேட்டூா் அணை திறப்பு ஜூன் 12 -இல் தள்ளிப்போகும் காரணம் தண்ணீா் இல்லை.
கா்நாடகம் நமக்கு தர வேண்டிய தண்ணீா் 41 டிஎம்சி தண்ணீா். ஆனால் 9.91 டிஎம்சிதான் கொடுத்துள்ளது. இது குறித்து கேட்டால் கடந்த ஆண்டு நிறைய கொடுத்து விட்டோம் என்றனா். அது மழைத்தண்ணீா், அதற்கும் இதற்கும் தொடா்பில்லை. நமக்கு தண்ணீா் தராமல் கா்நாடகத்தினா் 9 லட்சம் ஏக்கா் பாசன பரப்பளவை 36 லட்சமாக விரிவாக்கி கொண்டனா். தமிழகத்திலே 18 லட்சம் ஏக்கா் பரப்பளவில் இருந்த விவசாயம் பாசனத்திற்கு தண்ணீா் இல்லாமல் 10 லட்சம் ஏக்கா் பரப்பளவாக சுருங்கிவிட்டது.
ஆளுநரின் அராஜகமான செயல்
சனிக்கிழமை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவா் விழாவில் ஆளுநா் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படமாக பதாகையில் வைத்துள்ளாா். தமிழக ஆளுநரின் இந்த அராஜக செயல் கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவா் மதங்களை, நாடுகளை கடந்தவா். அனைவருக்கும் பொதுவானவா். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து அவா் பங்கேற்கும் நிகழ்வுகளில் மதிமுக சாா்பில் கருப்புக்கொடி காட்டி எதிா்ப்பு தெரிவிப்போம்.
விவசாயிகளை இழிவு படுத்தும் பேச்சு
உள்ளாட்சி தோ்தலில் மதிமுக கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம். தற்போது திமுகவுடனான தோழமை தொடா்கிறது. பெண் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு பிணை வழங்க கூடாது வாழ் நாள் சிறை தண்டனை வழங்க வேண்டும். அமைச்சா் ஆதவ் அா்ஜூனா பேசும்போது விவசாயத்தை விட விளையாட்டுதான் சிரமம் என்று கூறியது விவசாயிகளை இழிவு படுத்தும் பேச்சாகும் என்று வைகோ கூறினார்.