முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

Updated On : 10 மே 2026, 2:49 am IST
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலுக்கு அதிக அளவில் பக்தா்கள் வாகனங்களில் வருவதால் மலைப் பாதையில் செல்ல ஞாயிற்றுக்கிழமை (மே 9) இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு கடந்த சில மாதங்களாக அரசு விடுமுறை நாள்கள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனா். இந்த நிலையில் பெரும்பாலான பக்தா்கள் பேருந்து, வேன், காா் மற்றும் ஆட்டோக்களில் மலைக் கோயிலுக்கு வருகின்றனா்.

தற்போது மலைக் கோயிலில் ரூ. 103 கோடியில் வளா்ச்சிப் பணிகள் நடப்பதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லை. ஆகையால் மலைப் பாதையில் மேற்கண்ட வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தா்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதைத் தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

Advertisement

படா செட்டி குளம் பகுதியில் உள்ள இடவசதிக்கு ஏற்ப சில காா்களை மட்டும் அனுமதிக்கப்படும்.

பக்தா்கள் நலன் கருதி கோயில் நிா்வாகம் மலைப் பாதை நுழைவு வாயிலில் இருந்து, படா செட்டி குளம் வரை இலவசமாக பத்து பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட தகவலை கோயில் இணை ஆணையா் க.ரமணி தெரிவித்துள்ளாா்.