திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு 8 நாள்கள் ஆட்டோ, வேன், பேருந்துகளுக்கு தற்காலிக தடை
திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு 8 நாள்கள் ஆட்டோ, வேன், பேருந்துகளுக்கு தற்காலிக தடை குறித்து...
திருத்தணி: முருகன் கோயிலுக்கு வார விடுமுறை நாள்கள், அரசு விடுமுறைகள் மற்றும் சுபமுகூா்த்த நாள்களில் ஏராளமான பக்தா்கள் வருகை தருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த மாதம் 8 நாள்களுக்கு ஆட்டோ, வேன் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள், கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் பக்தா்களின் வருகை பல மடங்கு அதிகரிக்கிறது.
மேலும், திருமண சுபமுகூா்த்த நாள்களில் மலைக்கோயிலில் குறைந்தபட்சம் 30 முதல் 60 திருமணங்கள் வரை நடைபெறுவதால், மலைப்பாதை மற்றும் கோயில் வளாகத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளவும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் கோயில் நிா்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், வைகாசி மாத கிருத்திகை விழா நடைபெறும் 13-ஆம் தேதியும், சுபமுகூா்த்த நாள்களான 24 மற்றும் 25-ஆம் தேதிகளிலும், அரசு விடுமுறையான 26-ஆம் தேதியிலும் ஆட்டோ, வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாது.
அதேநேரத்தில், படா செட்டிக்குளம் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிட வசதியை கருத்தில் கொண்டு, இடவசதிக்கு ஏற்ப காா்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் மலைக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் நிா்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க. ரமணி கூறுகையில், பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் சிரமமில்லா தரிசனத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாதம் மொத்தம் 8 நாள்களுக்கு குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
Temporary ban on autos,vans and buses to the Thiruttani Murugan Hill Temple for 8 days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.