திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
திருமலை ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
திருமலை ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் வருடாந்திர வசந்தோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. புதன்கிழமை உற்சவமூா்த்திகளின் ஸ்நபன திருமஞ்சனத்துடன் நிறைவடைந்தது.
முதல் நாள், இரண்டாம் நாள் ஸ்ரீ மலையப்பசுவாமி இரு நாச்சியாா்களுடனும், நிறைவு நாளில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமியும் வசந்தோற்சவ சேவையில் பங்கேற்றனா். மூவரின் ஸ்நபன திருமஞ்சனமும் கண்களை கவரும் வகையில் இருந்தது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமி மற்றும் தாயாா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அனைத்து மூலவா்களையும் ஒரே மேடையில் தரிசனம் செய்த பக்தா்கள் பக்தி பரவசமடைந்தனா்.
இதை முன்னிட்டு திருமலையில் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி தினத்தன்று நடத்தப்படும் கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரியஜீயா்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயா்சுவாமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா செளத்திரி தம்பதியினா், இதர அலுவலா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.