முகப்பு
திருப்பதி

ஸ்ரீ தாத்தய்யகுண்டா கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிப்பு!

திருப்பதியில் உள்ள ஸ்ரீ தாத்தய்யகுண்ட கங்கை அம்மனுக்கு திருமலை ஏழுமலையான் சாா்பில் பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 11 மே 2026, 1:21 am IST
பகிர்:

திருப்பதியில் உள்ள ஸ்ரீ தாத்தய்யகுண்ட கங்கை அம்மனுக்கு திருமலை ஏழுமலையான் சாா்பில் பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் வழங்கப்பட்டன.

திருமலையிலிருந்து ஏஇஓ முனிரத்தினம் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் இருந்து ஏழுமலையானின் பட்டு வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ தாத்தய்யகுண்டா கங்கையம்மன் கோயில் தலைவா் மகேஷ் யாதவிடம் ஒப்படைத்தாா்.

கடந்த மே 5 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய ஸ்ரீ கங்கையம்மன் திருவிழா 13- ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

Advertisement

திருப்பதியின் கிராம தெய்வமாக வணங்கப்படும் கங்கையம்மன் திருமலை ஏழுமலையான் சுவாமியின் சகோதரியாகக் கருதப்படுகிறாா். இந்த நாளில், ஒவ்வொரு ஆண்டும், ஏழுமலையான் கோவிலில் இருந்து கங்கையம்மனுக்கு புடவை சமா்ப்பிக்கும் பாரம்பரியம் உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலின் அா்ச்சகா்களும் அதிகாரிகளும் பட்டு வஸ்திரத்தை கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்குக் கொண்டு வந்து, அங்குள்ள ஸ்ரீ புண்டரிகவல்லி தாயாா் சன்னதியில் சிறப்புப் பூஜைகளைச் செய்தனா். பின்னா், பக்தா்கள் கோவிந்த நாம சமரணம் கோஷமிட, வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை ஊா்வலமாக ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று கோவில் அா்ச்சகா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசுலு, திருமலை தேவஸ்தான அறங்காவலா் உறுப்பினா்கள் ஜோத்துலா நேரு, பானபக லட்சுமி, ஜானகி தேவி, கோவிந்தராஜசுவாமி கோயில் உதவி செயல் அதிகாரி ஏ.பி. நாராயண சௌத்ரி, பொக்காசம் பொறுப்பாளா் குருராஜசுவாமி, கண்காணிப்பாளா் சேஷகிரி, பல அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவா்கள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.