தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்தும் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் திருவத்திபுரம் அஞ்சலகம்
செய்யாறில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்தும் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் திருவத்திபுரம் தலைமை அஞ்சலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டவும், அஞ்சலகத்தை நகரின் மையப் பகுதிக்கு
செய்யாறில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்தும் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் திருவத்திபுரம் தலைமை அஞ்சலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டவும், அஞ்சலகத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்றவும் அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வருவாய்க் கோட்டமாக செய்யாறு விளங்கி வருகிறது. அரசு அலுவலகங்களின் தலைமையிட அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
செய்யாறு தொகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செய்யாறில் உள்ள சிப்காட் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவ்வளவு சிறப்பு மிகுந்த செய்யாறில் உள்ள திருவத்திபுரம் தலைமை அஞ்சலகம், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுவதற்க்கு முன்பு சித்தூர் மாகாணமாக இருந்தபோதே தொடங்கப்பட்டதாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அஞ்சலகத்துக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்ய முன்னாள் எம்எல்ஏக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்தும் அஞ்சலக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், இன்று வரை சொந்தக் கட்டடம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. தற்போது செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள கட்டடத்தின் மாடிப்பகுதியில் திருவத்திபுரம் தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அஞ்சலகத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், சென்னையில் உள்ள அஞ்சலக பொது மேலாளர், திருவண்ணாமலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஓவ்வூதியர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் புகார் கூறுகின்றனர்.
எனவே, இந்த அஞ்சலகத்தை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் விதமாக, செய்யாறு நகரின் மையப் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தரைதளக் கட்டடத்துக்கு மாற்றவும்,
விரைவில் சொந்தக் கட்டடம் கட்டவும் அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.