முகப்பு
திருவண்ணாமலை

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:16 am IST
பகிர்:

கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமம், காமாட்சியம்மன் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். 
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக, தினமும் குடிநீர் தேடி பல கிலோ மீட்டர் தொலைவு பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட  பெண்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் உதவி ஆய்வாளர்கள் தமிழரசு, உதயகுமார், மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீசன், ஊராட்சிச் செயலர்கள் தேவராஜ், வேலு ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விரைவில் குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.