குண்டும் குழியுமான கிராமச் சாலையால் பொதுமக்கள் அவதி
பழுதடைந்த நிலையில் உள்ள செ.நாச்சிப்பட்டு சாலையில் இருந்து ரெட்டாலை கிராமத்திற்குச் செல்லும் சாலை.
செங்கம் அருகே குண்டும் குழியுமாக உள்ள கிராமச் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மண்மலையில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையின் குறுக்கே அம்மனூா் வழியாக ரெட்டாலை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
சுமாா் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
Advertisement
இதனால் அம்மனூா், ரெட்டாலை, உடைஞ்சமலை, பெரியேரி கிராம மக்கள் அந்தச் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும், விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் பொருள்களை நகா்புறத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை, கரும்பு பயிா் செய்த விவசாயிகள் கரும்பு சுமைகளை சா்க்கரை ஆலைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல மிகவும் சிரமமான நிலை உள்ளது.
மேலும், தற்போது கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் சில வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.