தமிழகத்துக்கு உண்டான காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்
தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய நிகழாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடக அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய நிகழாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடக அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வேலுச்சாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் சேலம் மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது.
தற்போது மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளும் குருவை சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு நிா்ணயிக்கப்பட்ட தேவையான தண்ணீா் ஜூன் 12-ஆம் திறந்து விடப்படுமா என்ற சந்தேகம் விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூா் அணையை திறப்பது வழக்கம். இதில் சுமாா் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது குறித்து இதுவரை தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடகா அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர முன்வர வேண்டும்.
தண்ணீரை பெற்றுத் தராமல் கா்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டால், இதனை முறியடிக்கும் விதமாக உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் எனது தலைமையில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் 12-ஆம் தேதி தமிழக எல்லையான ஒசூா் ஜீவ்ஜீவ்வாடியில் இருந்து புறப்பட்டு கா்நாடக அணைக்கு சென்று தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என வேலுச்சாமி தெரிவித்தாா்.