முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு வழங்காமல் வீணடிக்கப்பட்ட இடுபொருள்கள்

அனக்காவூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இடுப் பொருள் திரவங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.

Updated On : 24 ஜூன் 2026, 12:01 am IST
அனக்காவூா் வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தின் பின்புறம் வீசப்பட்டுள்ள விவசாய இடுபொருள்கள்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இடுப் பொருள் திரவங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.

அனக்காவூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய எல்லைக்குள் பல்லாயிரம் ஏக்கரில் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் வோ்க்கடலை, நெல் மற்றும் தோட்டப்பயிா்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவா்கள் பயன்பாட்டுக்காக தமிழக அரசு தோட்டக்கலைத் துறை சாா்பில் இடுபொருள்கள் எனப்படும் திரவங்களை வட்டார அளவிலான வேளாண்மை மையங்களுக்கு வழங்கி உள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, அனக்காவூா் வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு 2023 - 2025 ஆண்டுகளில் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான இடுபொருள் திரவங்களை அனுப்பிவைக்கப்பட்டன. இவ்வாறு நூற்றுக்கணக்கான பெட்டிகளில் அனுப்பப்பட்ட திரவங்கள் விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பில் இருந்துள்ளது.

மேலும், திரவ வடிவிலான இடுபொருள்கள் அலுவலகத்தின் வெளியே பெட்டிபெட்டியாக வீசப்பட்டுள்ளன.

இதில் சில மருந்துகள் காலாவதி ஆகியும், சில வகை மருந்துகள் 2028-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தும் வகையிலும் உள்ளன. இவை மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகின்றன.

வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு விதை மற்றும் உரங்கள் வாங்க வந்த விவசாயிகள் இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். தேவைப்படும் நேரத்தில் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்படாமல், இந்த பொருள்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கியிருந்தால் விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும் என வேதனையுடன் தெரிவித்தனா்.

இதுகுறித்து துறை உயா் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments