பாலியல் தொல்லை : பேராசிரியர் மீது நடவடிக்கைக் கோரி மாணவிகள் சாலை மறியல் முயற்சி
மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி அரக்கோணம் அருகே உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை
மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி அரக்கோணம் அருகே உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர்.
அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் புகார் தெரிவித்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தரும் இதில் விசாரணை நடத்தி, இப்பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்தாராம்.
ஆனால் குறிப்பிட்ட அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால், கல்லூரி வளாகத்தில் கூடிய மாணவிகள் மற்றும் மாணவர்கள், அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி, அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை நெமிலி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பிரச்னை தொடர்பாக இதுவரை மாணவிகள் யாரும் எழுத்து மூலமாக புகார் அளிக்காத நிலையில், நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், எழுத்து மூலமாக புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து 51 மாணவிகள் குறிப்பிட்ட பேராசிரியர் மீது எழுத்து மூலமாக புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.