மயானத்துக்குச் செல்லும் வழி அடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
மாதனூர் அருகே மயானத்துக்குச் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதனூர் அருகே மயானத்துக்குச் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதனூர் அருகே பாலூர் ஊராட்சிக்குள்பட்ட ராஜபாளையம் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த சரோஜா (70) உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியை நிலத்தின் உரிமையாளர் முள்வேலி வைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, சரோஜாவின் வீட்டு முன்பு கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த டிஎஸ்பி சச்சிதானந்தம், வட்டாட்சியர் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியை தாற்காலிகமாக அகற்றி விடுவதாகவும், பின்னர் இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.