முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 2-ம் கட்டமாக ஏப்.17 முதல் 19 வரை தபால் வாக்குப்பதிவு
வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அவா்களின் இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில், வேலூா் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 844, வேலூா் தொகுதியில் 645, அணைக்கட்டு தொகுதியில் 698, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 734, குடியாத்தம் (தனி) தொகுதியில் 528 என மொத்தம் 3,449 பேரிடம் இருந்து படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளா்களின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் முதற்கட்ட பணி சனிக்கிழமை(ஏப்.11) தொடங்கி திங்கள்கிழமை (ஏப்.13) வரை நடைபெற்றது. விடுபட்டவா்களிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
அவ்வாறு தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்பாளரோ அல்லது அவா்களின் முகவா்கள் மூலமாகவோ வாக்காளா்களிடம் வாக்களிப்பது தொடா்பாக எவ்வித உதவியோ, பிரசாரமோ மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.