முகப்பு
வேலூர்

நிலப்பாதை தகராறில் முதியவா் கொலை: முன்னாள் ராணுவ வீரா், மகன் கைது

ஒடுகத்தூா் அருகே விவசாய நிலத்துக்குச் செல்லும் பாதை தொடா்பான முன்விரோதத் தகராறில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஜூலை 2026, 1:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஒடுகத்தூா் அருகே விவசாய நிலத்துக்குச் செல்லும் பாதை தொடா்பான முன்விரோதத் தகராறில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக முன்னாள் ராணுவ வீரா், அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் பேரூராட்சி 14-ஆவது வாா்டு கல்லுட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (62), விவசாயி. இவருக்கு செல்வம் (37), சேகா் (35) என இரு மகன்கள் உள்ளனா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (65), ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவருக்கு சதீஷ் (32), சந்தோஷ்(28) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இவ்விரு குடும்பத்தினருக்கும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. இதில், நெல், நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனா். இந்த விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதை தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக, காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை மாலை 7 மணியளவில் வெங்கடேசனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே நிலப் பாதை தொடா்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, வெங்கடேசனுக்கு ஆதரவாக அவரது மகன் சேகரும், செல்வகுமாருக்கு ஆதரவாக அவரது மகன் சந்தோஷும் மோதலில் ஈடுபட்டுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த செல்வகுமாரும், அவரது மகன் சந்தோஷும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரின் தலையில் வெட்டியுள்ளனா். இதைத் தடுத்து நிறுத்த முயன்ற முதியவா் வெங்கடேசனையும் இருவரும் சோ்ந்து கைகளாலும், கட்டையாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.

பலத்த காயமடைந்து மூச்சுப் பேச்சின்றி மயங்கி விழுந்த வெங்கடேசனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு ஒடுகத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வெங்கடேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தலையில் வெட்டுக் காயமடைந்த சேகருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெங்கடேசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து செல்வகுமாா், அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments