தவறி விழுந்த முதியவா், வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
வேலூா் அருகே வீட்டில் நாற்காலியில் இருந்து தவறி விழுந்த முதியவரும், பிரம்மபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
வேலூா் அருகே வீட்டில் நாற்காலியில் இருந்து தவறி விழுந்த முதியவரும், பிரம்மபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
வேலூரை அடுத்த கீழ்மொணவூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்தாஸ் (55). இவா் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் உள்ள அலமாரியில் இருந்து பொருள்களை எடுப்பதற்காக நாற்காலியின் மீது ஏறியுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை உறவினா்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரேம்தாஸ், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதே போல் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் ஷா என்பவரின் மகன் கன்ஷியாம் (28). இவா் பிரம்மபுரத்தை அடுத்த சேவூா் பகுதியில் தங்கி, அங்குள்ள குடோன் ஒன்றில் பணியாற்றி வந்தாா். கடந்த 4-ஆம் தேதி இரவு மாடியில் இருந்தபோது கன்ஷியாம் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கன்ஷியாம், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பிரம்மபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.