மூளைச்சாவு அடைந்த தில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
சித்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த புதுதில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக வேலூா் நறுவீ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சித்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த புதுதில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக வேலூா் நறுவீ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் அரகொண்டா பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் சீனிவாசன் (59). இவா் புதுதில்லி அரசுத் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சீனிவாசன், கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் வேலூா் நறுவீ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு மருத்துவா்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மூளைச் சாவு அடைந்தாா். தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சீனிவாசனின் மனைவி தீபா, மகள் வன்சிகா ஆகியோா் முன்வந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சீனிவாசனின் 2 சிறுநீரகங்களில் ஒன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொன்று நறுவீ மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரது இரண்டு கண்கள் வேலூா் சிஎம்சி. மருத்துவமனைக்கும், கல்லீரல் நறுவீ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டபோது வேலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் பழனி, நறுவீ மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் மருத்துவா் பால் ஹென்றி, மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவா் ராஜசேகா், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் பிரசன்னா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.