இளைஞர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கோவையில் கஞ்சா கேட்டு தராததால் நண்பரைக் கொலை செய்த இரு இளைஞர்களுக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கோவையில் கஞ்சா கேட்டு தராததால் நண்பரைக் கொலை செய்த இரு இளைஞர்களுக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, கணபதி கணேசன் லே- அவுட்டைச் சேர்ந்தவர் ஆர்.பெர்னாண்டஸ் (26). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு கணபதி ராஜவீதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (31), மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சிவவிஷ்ணு (எ) விஷ்ணு (31) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பெர்னாண்டஸிடம் இவர்கள் இருவரும் அடிக்கடி கஞ்சா கேட்டதால் தகராறு ஏற்பட்டது. மேலும், இருவரின் பெற்றோரையும் பெர்னாண்டஸ் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் பெர்னாண்டஸை கொலைசெய்ய முடிவு செய்தனர். இதன்படி, 2005 அக்டோபர் 2-ஆம் தேதி பெர்னாண்டஸை கணபதி சென்னாரித் தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், பிளேடால் கழுத்தை அறுத்தும் பெர்னாண்டஸை கொலை செய்தனர். பின்னர் சடலத்தைக் கிணற்றுக்குள் வீசி, துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கோழிக்கழிவுகளையும் உள்ளே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், பெர்ணான்டஸை காணவில்லை என்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில்அவரது தாயார் பிரேமா 2010-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்நிலையில், 2012-இல் வேறு ஒரு வழக்கில் சௌந்தர்ராஜனும், விஷ்ணுவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது கோவையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, இவர்கள் இருவரும் சேர்ந்து பெர்னாண்டலை கொலை செய்து கிணற்றில் வீசிய தகவல் ஆறுமுகத்துக்கு தெரியவந்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கிணறு முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. ரூ.10 லட்சம் அரசு செலவில் கிணற்றைத் தோண்டியபோது ஒரு எலும்புக்கூடு மீட்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனையில் கொலை செய்யப்பட்டவர் பெர்னாண்டஸ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சௌந்தர்ராஜன், விஷ்ணு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கானது கோவை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எம்.என்.செந்தில்குமார் புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதில், சௌந்தர்ராஜன், விஷ்ணு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.குருபிரசாத் ஆஜரானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.