கோவையில் அரசுப் பொருள்காட்சி 15-இல் தொடக்கம்: ஆட்சியர் த.ந.ஹரிஹரன்
கோவை சிறைச்சாலைக் கண்காணிப்பு மைதானத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து 45 நாள்களுக்கு அரசுப் பொருள்காட்சி நடைபெறும் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை சிறைச்சாலைக் கண்காணிப்பு மைதானத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து 45 நாள்களுக்கு அரசுப் பொருள்காட்சி நடைபெறும் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசுப் பொருள்காட்சி நடத்துவது குறித்து அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தொடங்கப்படும் அரசுப் பொருள்காட்சி தொடர்ந்து 45 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்தப் பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம கைத்தொழில் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், உப்பு நிறுவனம், சிமெண்ட் கார்ப்ஃபரேஷன் நிறுவனம், எரிசக்தி முகமை ஆகிய 12 அரசு சார்பு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இத்துறைகள் அனைத்து தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அரங்குகள் அமைக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இரவு 11 மணி வரையில் சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீயணைப்பு வாகனம் உரிய அலுவலர்களுடன் பொருள்காட்சி மைதானத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அரசுப் பொருள்காட்சியை காணவரும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியரும்அரசுப் பொருள்காட்சியைக் காண்பதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப் பொருள்களும், பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, அரசு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.