புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு நிதி திரட்டிய காவல் துறையினர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு அவருடன் பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த காவல் துறையினர் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு அவருடன் பணிபுரிந்த கோவையைச் சேர்ந்த காவல் துறையினர் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.
கோவை மாநகர காவல் துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் வனிதா. காவலராகப் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் சேலத்துக்கு இடமாறுதலாகிச் சென்றார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, இவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் இணைந்து இதற்காக பிரத்யேக கட்செவி அஞ்சல் குழுவைத் தொடங்கி அதன் மூலம் காவலர் வனிதாவின் சிகிச்சைக்காகப் பணம் திரட்டினர். இதன்மூலம் சுமார் ரூ.2 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டது.
இதுகுறித்து வனிதாவுடன் பணியாற்றிய காவலர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண் காவலர்களின் முயற்சியைப் பாராட்டிய அவர், அவர்கள் சேலம் சென்று வருவதற்காக வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன்மூலம் சேலம் சென்ற அவர்கள் வனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சிகிச்சைக்கு திரட்டப்பட்ட நிதியை
வழங்கினர்.