முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 14 ஏப்ரல் 2026, 1:57 am IST
வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்
பகிர்:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுமாா் 12.30 மணி அளவில் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள், கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

நள்ளிரவில் அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். அதிகாலை வரை நடைபெற்ற இந்த சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அதில், 15 சயனைடு விஷவாயு குப்பிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அடுத்த மூன்று மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டதில், இதுவும் புரளி எனத் தெரியவந்தது.