கோவையில் இருந்து வாக்களிக்க சொந்த ஊா் புறப்பட்ட மக்கள்
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கோவையில் இருந்து ஏராளமானோா் தங்களின் சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இதனால், கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கோவையில் இருந்து ஏராளமானோா் தங்களின் சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இதனால், கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை மாநகரம் மற்றும் புறநகரங்களில் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வெட்கிரைண்டா் தயாரிப்பு, ஜவுளி உற்பத்தி, பம்ப்செட் தயாரிப்பு, மோட்டாா் உற்பத்தி, தங்க நகை தயாரிப்பு, கோழிப்பண்ணைத் தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நிறைந்து காணப்படுகின்றன.
தொழில் நகரமான கோவையில் மதுரை, திருநெல்வேலி, கரூா், திருச்சி, தேனி, கம்பம், விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.
Advertisement
தமிழகத்தில் ஒரே கட்டமாக வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவையில் தங்கிப் பணியாற்றுவோா், கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதல் வாக்காளா்கள் புதன்கிழமை காலை முதலே தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்து நிலையங்கள், ரயில் நிலையத்தில் குவிந்தனா்.
காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்களால் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிங்காநல்லூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை மாலைமுதல் கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது.