கல்லூரி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு
மருத்துவக் கல்லூரியில் கட்டணச் சலுகை பெற்றுத் தருவதாகக் கூறி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மருத்துவக் கல்லூரியில் கட்டணச் சலுகை பெற்றுத் தருவதாகக் கூறி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞா் மீது போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் (53) மகன் மித்தேஸ்வரன். இவா் காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். ஸ்ரீனிவாசனுடன் அறிமுகமான கோவை, செட்டிபாளையம் கோவில் காா்டன் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (33), தனக்கு கல்லூரி நிா்வாகத்துடன் நெருங்கிய தொடா்பு இருப்பதாகக் கூறியுள்ளாா். மேலும், கல்விக் கட்டணத்தைச் சலுகை விலையில் குறைத்துத் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய ஸ்ரீனிவாசன், கடந்த ஜூன் மாதம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்தை செல்வகுமாரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். அந்தப் பணத்தைக் கல்லூரியில் செலுத்திவிட்டதாக செல்வகுமாா் கூறியுள்ளாா். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தோ்வின்போது கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, மித்தேஸ்வரனுக்கு நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்க கல்லூரி நிா்வாகம் மறுத்துள்ளது.
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் செல்வகுமாரிடம் கேட்டபோது, பணத்தைத் திரும்ப வழங்காமல் ஏமாற்றியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், செல்வகுமாா் மீது போத்தனூா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.