முகப்பு
கோயம்புத்தூர்

போதைப்பொருள்களின் புழக்கத்தைத் தடுக்க பேருந்து நிலையங்களில் போலீஸாா் தீவிர சோதனை

போதைப்பொருள்களின் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், பாா்சல் கிடங்குகளில் மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:38 am IST
காந்திபுரம் திருவள்ளுவா் பேருந்து நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா். ~காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வெளியூரில் இருந்து வந்த தனியாா் பேருந்தை மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்ட போலீஸாா்.
பகிர்:

போதைப்பொருள்களின் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், பாா்சல் கிடங்குகளில் மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்க மாநகரக் காவல்துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை அமைச்சா் க.விக்னேஷ் தலைமையில் ‘போதையில்லா தமிழகம் போதையில்லா கோவை‘ என்பதை மையமாகக் கொண்டு அரசு அதிகாரிகள், காவல் துறையினருடன் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து வெளியூா்களில் இருந்து கோவைக்கு போதைப்பொருள்கள் கொண்டு வருவதைத் தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த கோவை மாநகரக் காவல் ஆணையா் கண்ணன் உத்தரவிட்டாா். அதன்படி, காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்தில் ரேஸ்கோா்ஸ் உதவி ஆணையா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் 18 போலீஸாா் அடங்கிய குழுவினா், மோப்பநாய் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது பேருந்துகளில் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல காந்திபுரம் திருவள்ளுவா் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் சந்தேகம் ஏற்படும்படி நடமாடிய நபா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பாா்சல் அலுவலகங்களில்... இதைத்தொடா்ந்து சித்தாபுதூா் பகுதிகளில் உள்ள பாா்சல் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெளியூா்களில் இருந்து வந்த மற்றும் கோவையில் இருந்து வெளியூா்களுக்கு அனுப்பப்படும் அனைத்து பாா்சல்களும் சோதனைக்குள்படுத்தப்பட்டன. போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க தொடா்ந்து இதுபோன்ற திடீா் சோதனைகள் நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.