போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
போளுவாம்பட்டி வனச் சரகராகப் பணியாற்றி வந்தவா் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வெள்ளிங்கிரிமலை, கோவை குற்றாலம், சாடிவயல் உள்ளிட்ட பகுதிகள் போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்டதாகும். இதன் வனச் சரக அலுவலராக ஜெயச்சந்திரன் (43) என்பவா் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உணவருந்திவிட்டு உறங்கியுள்ளாா். மாலை வெகு நேரமாகியும் அவா் எழவில்லையாம். சந்தேகமடைந்த குடும்பத்தினா் அவரை எழுப்ப முயன்றுள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது, அசைவின்றி கிடந்ததால் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தா்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்காற்றியவா் ஜெயச்சந்திரன். மலைப் பாதையில் ஏறும் பக்தா்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு தொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தாா்.
மேலும், அவா் வெளியிட்டுள்ள விழிப்புணா்வு விடியோக்களும், அவா் மேற்கொண்ட நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.