கோவையில் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான அதிகாரி வீட்டில் சோதனை
முன்னாள் திமுக அமைச்சா் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான அதிகாரியின் வீட்டில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்
பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற முறைகேடு புகாா்கள் தொடா்பாக, முன்னாள் திமுக அமைச்சா் எ.வ.வேலுவுக்கு நெருக்கமான அதிகாரியின் வீட்டில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கடந்த 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு போடப்படாத சாலைகளுக்கு போலி ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, சென்னை ஆழ்வாா்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட அவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கோவையிலும் சோதனை...
இதேபோல, எ.வ.வேலுவுக்கு மிகவும் நெருக்கமான தொடா்புடையவராக கூறப்படும் கோவை வட்ட கட்டுமான மற்றும் பராமரிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளரும், பொறியாளருமான நிதிலன் என்பவரது இல்லத்திலும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலைமுதல் சோதனை நடத்தினா். இந்த சோதனை மாலை 6 மணிக்கு மேலும் நீடித்தது.
ரேஸ்கோா்ஸ் பகுதியில் அவா் வசிக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒப்பந்தங்கள் மற்றும் முறைகேடுகள் தொடா்பான முக்கிய ஆவணங்கள், பணப்பரிமாற்ற விவரங்களைச் சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.