விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: டிசம்பர் 27இல் எதிர்க் கட்சியினர் உண்ணாவிரதம்
விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு அருகே விவசாயிகள்
விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு அருகே விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, எதிர்க் கட்சியினர் சார்பில் டிசம்பர் 27 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு அருகே மூலக்கரை பிரிவில், உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், டிசம்பர் 17 ஆம் தேதி முதல் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் 6 பெண்கள் உள்ளிட்ட 11 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 8 ஆவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் தொடர்கிறது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து விவசாய நிலத்தை அழிக்கக் கூடாது. அதற்கு மாற்றாக சாலையோரங்களில் புதைவட கேபிள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். உயர் மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அனைத்துக் கட்சிகள் சார்பில் டிசம்பர் 27 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், திமுக, காங்கிரஸ், அமமுக, கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.