கோபி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோபி அருகே கொன்னமடை கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கோபி அருகே கொன்னமடை கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குள்பட்ட கொன்னமடை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கூகலூர் பேரூராட்சி சார்பில் ஆற்றுநீர் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் 100- க்கும் மேற்பட்டோர் பெருந்தலையூர்-கூகலூர் இணைப்பு சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர். இதனால், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், கூகலூர் பேரூராட்சி அலுவலர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்து புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.