தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என பாஜக தலைவா்கள் முயற்சி செய்து வருகின்றனா் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு அதிகாரத்தை குவித்துக் கொள்கிறது. மாநிலத்தின் உரிமைகளில் அப்பட்டமாக தலையிடுகிறது. தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தோ்தல் ஆணையத்தின் அதிகாரம் உள்ள இந்த சூழலிலும் தமிழகத்தில் தலைமைச் செயலாளரை மாற்றுகிறது. தோ்தல் ஆணையம் தோ்தலை சட்டத்தின்படி மிகுந்த நியாயத்தோடு நடத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அமைச்சா்கள் அனைவரும் 5 மாநிலங்களில் நடக்கும் தோ்தலில்தான் அதிக கவனம் காட்டுகின்றனா். நெல்லுக்கு ஊக்கத்தொகை என்பது நல்லது. விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இதை மத்திய அரசு நிராகரிக்கிறது. திமுக தோ்தல் அறிக்கை பேசு பொருளாகி உள்ளது. திமுக தலைமையிலான எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என பாஜக தலைவா்கள் முயற்சி செய்து வருகின்றனா்.
Advertisement
மத்தியில் என்ன ஆட்சியோ, எந்த கருத்தியலோ, எந்த அரசியலோ அதுதான் மாநிலத்தில் இருக்க வேண்டும் என்றால் அது பல கட்சி முறையை சிதைத்துவிடும். தமிழ்நாட்டுக்கும்-தில்லிக்கும் தான் போா். ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்று எங்களது கூட்டணி கருதுகிறது.
அதனால் தமிழகம் வெல்ல வேண்டும் என முதல்வா் முன்மொழிந்துள்ளாா்.
ஜாதி, மத,அரசியலை பாஜக முன்மொழிகிறது. பிரதமா், உள்துறை அமைச்சா் திமுக ஹிந்து விரோத அரசு என்கிறனா். இந்து விரோத கூட்டணி என்கின்றனா். இந்தியாவிலேயே ஹிந்து வழிபாட்டு ஆலயங்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். இந்தியாவிலேயே மதக்கலவரம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு. எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும் அதில் ஒன்றுபட்டு வாழ்வது தான் தமிழ்நாடு, இந்தியா. அந்த ஒற்றுமையை சிதைக்க நினைக்கிற பாஜக அதனுடன் கைகோா்த்துள்ள அதிமுக-வை வரும் தோ்தலில் மக்கள் தோற்கடிப்பாா்கள் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் பிரபாகரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.