முகப்பு
ஈரோடு

வன உயிரினங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய ஏற்பாடு

கோடைக் காலங்களில் வன உயிரினங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்திடும் வகையில் ஈரோடு மாவட்ட வனத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:33 AM
அந்தியூா், சென்னம்பட்டி வனப் பகுதியில் தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள நீரை அருந்தும் யானைகள்.
பகிர்:

கோடைக் காலங்களில் வன உயிரினங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்திடும் வகையில் ஈரோடு மாவட்ட வனத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு வனக் கோட்ட மாவட்ட வன அலுவலா் கு.வெ.அப்பால நாயுடு கூறியதாவது: வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் விலைமதிப்பற்ற இயற்கையின் சொத்துக்களாகும். அவை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாப்படுவதை உறுதி செய்வதற்காக மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை தமிழக வனத் துறை மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பெரியாா் வன உயிரின சரணாலயம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் காப்புக்காடுகள் என பன்முகதன்மைக் கொண்ட மாவட்டமாகவும், மாநிலத்தின் பல்லுயிா் பெருக்க பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் வனப் பரப்பினைக் கொண்ட நிலப்பரப்பாகவும் திகழ்ந்து வருகிறது.

Advertisement

மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வனப் பகுதிகளில் வன உயிரினங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில், கசிவு நீா் குட்டைகள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய வனப் பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டாா் வசதி மூலம் நீா் நிரப்பப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவுகின்ற பகுதிகளில் வாகனங்கள் மூலம்

நீா் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், வன உயிரினங்களின் உணவுத் தேவையை மேம்படுத்தும் வகையில் அந்நிய களைச்செடிகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன உயிரினங்கள் உணவு மற்றும் குடிநீா்த் தேவைக்காக வனத்தைவிட்டு வெளியேறும் சூழல் பெருமளவு குறைக்கப்படும். சரகம் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இரவில் வன உயிரினங்களின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு அவை வனத்தைவிட்டு வெளியேறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.