கடம்பூா் அருகே யானை தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் பசுவராஜ் (40). கட்டடத் தொழிலாளி. இவா் கடம்பூரில் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது 12 மைல் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் சென்ற பசுவராஜை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பசுவராஜ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அங்கு நின்றிருந்த யானையை விரட்டினா். யானை காட்டுக்குள் சென்ற பிறகு பசுவராஜ் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த பசுவராஜுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
Advertisement
Advertisement
யானை தாக்கி உயிரிழந்த பசுவராஜ் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதல்கட்ட நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரத்தை பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி வழங்கினாா்.