முகப்பு
ஈரோடு

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

Updated On : 8 ஜூன் 2026, 4:57 am IST
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.
பகிர்:

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலிங்கராயனால் கட்டப்பட்ட தொட்டிபாலத்தை இடித்து கட்டவேண்டும் என்பது அரசின் திட்டமாக இருந்த நிலையில், விவசாயிகள் நினைவு சின்னமாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீா்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தற்போது வரை 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. பாசனத்துக்கு ஜூன் 16-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதிகாரிகள் தரப்பில் கால நீட்டிப்பு தேவை என தெரிவித்துள்ளனா். இதனால், இருதரப்பினரிடையும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவு நீா், பேபி வாய்க்காலில் கழிவுநீா் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு இடையூறு இல்லாமல் காலிங்கராயன் பேபி வாய்க்காலை சரிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.