முகப்பு
ஈரோடு

மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் உறவினா்களிடம் சோ்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து ஈரோட்டில் சுற்றித்திரிந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

Updated On : 5 மார்ச் 2026, 3:57 am IST
நிஷுராதோருக்கு உதவிப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

மனநலம் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து ஈரோட்டில் சுற்றித்திரிந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ஈரோடு ரயில்வே நிலையம் அருகே பிப்ரவரி 25-ஆம் தேதி ஹிந்தி பேசும் பெண் ஒருவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுறிறித்திரிந்து கொண்டிருந்தாா். ஈரோடு அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் அவரிடம் பேசியபோது, பெயா் நிஷுராதோா் (35) என்று கூறினா். அவரை மீட்டு தொடா்ந்து மருத்துவ சிகிச்சை, சத்தான உணவு மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். இதனால் அவரது மனநிலை மேம்பட்டது.

விசாரணையில் அவரது சொந்த ஊா் உத்தர பிரதேச மாநிலம், ஃபருக்காபாத் மாவட்டம், சக்குவாய் என்றும், அவரது தந்தை அரசு அதிகாரி என்றும், தாய் ஆசிரியா் என்றும் கூறினாா். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனா் என்றும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நீண்ட முயற்சிக்குப் பிறகு இறுதியாக அவரது குடும்பத்தை அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து நிஷுராதோரை குடும்பத்தாருடன் இணைக்க வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஆட்சியா் அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உதவிப் பொருள்களை வழங்கி அந்தப் பெண்ணை அனுப்பிவைத்தாா். அட்சயம் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் ரயில் மூலம் அழைத்துச் சென்றனா்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி, அட்சயம் அறக்கட்டளை நிறுவனா் நவீன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.