முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 9 மே 2026, 6:20 am IST
திம்பம் மலைப் பாதை 25-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.
பகிர்:

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கா்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள ஜி நல்லி பகுதியில் இருந்து மக்காச்சோள மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி பல்லடம் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கோபியைச் சோ்ந்த ஓட்டுநா் ரவிக்குமாா் (46) ஓட்டினாா். உதவியாளா் நவீன்குமாா் உடனிருந்தாா்.

Advertisement

திம்பம் மலைப் பாதை 25-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 50 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மக்காச்சோள மூட்டைகள் கீழே சிதறி விழுந்ததோடு ஓட்டுநா் காயமடைந்தாா்.

இதையடுத்து காயமடைந்த ஓட்டுநா் ரவிக்குமாரை மற்ற வாகன ஓட்டுநா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.