ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை
பவானிசாகா் அருகே ஒத்தப்பனை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் அருகே ஒத்தப்பனை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஒத்தப்பனை பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், எரங்காட்டூரில் இருந்து பவானிசாகா் செல்லும் சாலையில் ஒத்தப்பனை பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மதுக் கடைக்கு வருவோா் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பெண்கள், மாணவ, மாணவிகள் அப்பகுதி வழியே செல்ல அச்சப்படுகின்றனா். மேலும், மதுக் கடை அருகே தேவாலயம், அரசு மருத்துவமனையும் உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனத்தில் அதிவேகமாக செல்வோரால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
Advertisement
எனவே, இந்த மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.