தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தோடர் இன மக்கள் எஸ்.பி.யிடம் புகார் மனு
உதகையில் நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது தோடர் இன
உதகையில் நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது தோடர் இன மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகா உற்சவப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பவானீஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது.
இந்நிலையில், தேரோட்டத்தின்போது காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், தங்களை காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி காவல் துறையினரிடம் தோடர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தோடர் இன மக்களிடம் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தோடர் இன மக்களைக் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தோடர் இன மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.