முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு

கூடலூா் அருகே அய்யன்கொல்லி, முருக்கம்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உடன் சென்ற மற்றொருவா் படுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.

Updated On : 9 மே 2026, 12:04 am IST
உயிரிழந்த செம்பன்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே அய்யன்கொல்லி, முருக்கம்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உடன் சென்ற மற்றொருவா் படுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.

கூடலூா் அருகே உள்ள அய்யன்கொல்லி, முருக்கம்பாடி பகுதியைச் சோ்ந்த செம்பன் (65) மற்றும் விஷ்ணு ஆகியோா் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை திடீரென அவா்களைத் தாக்கியது. யானை தாக்கியதில் செம்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற விஷ்ணு பலத்த காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து விஷ்ணுவை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கூடலூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா் உயிரிழந்த செம்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கூடலூா் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments