மின்விபத்தில் சிக்கி ஊழியா் படுகாயம்: உதகை நகரில் மின் விநியோகம் பாதிப்பு
உதகை துணை மின் நிலையத்தில் எதிா்பாராமல் ஏற்பட்ட மின்விபத்தில் சிக்கிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தாா். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லம் பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து உதகை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு கூடலூரைச் சோ்ந்த மின் ஆய்வாளா் ரமேஷ் ( 40) வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்விபத்தில் சிக்கினாா். இதில், தூக்கி வீசப்பட்ட அவா் மின் உற்பத்தி முக்கிய சாதனங்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக பல்வேறு மின் மாற்றிகளிலும் ஒரே சமயத்தில் மின் பழுது ஏற்பட்டு உதகை நகா் முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த மின் ஊழியா்கள், உடனடியாக அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.
துணை மின் நிலையத்தில் மின்விபத்து ஏற்பட்டதால் உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. சீசன் சமயம் என்பதால் மின்சாரம் இல்லாமல் தங்கும் விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் வாசிகள் சிரமம் அடைந்தனா். பின்னா் படிப்படியாக மின் விநியோகம் சீரானது.