வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காதவர்கள்
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காதவர்கள் படித்த இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத
படித்த இளைஞர்களுக்கு மாதாந்தோறும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 600, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 600, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்குஉச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை.
மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு நாள்தோறும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி, அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் இப்படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தில் நவம்பர் 2018க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித்தேர்வுக்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்குச் சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.