முகப்பு
திருப்பூர்

பாதசாரி, இருசக்கர வாகனங்கள் மீது  லாரி மோதல்: விவசாயி சாவு; இருவர் காயம்

பல்லடத்தில் லாரி மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவ்விபத்தில் மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:27 am IST
பகிர்:


பல்லடம்: பல்லடத்தில் லாரி மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவ்விபத்தில் மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 
பல்லடம், நாதேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சக்திகுமரேச கிருஷ்ணன் (40), விவசாயி. மேலும், இவர் மின் வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் குப்புசாமிநாயுடுபுரம் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் பல்லடம் - கோவை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். 
செம்மிபாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி மகன் ரகுபதி (45) பல்லடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மாணிக்காபுரம் ஊராட்சி வைரம் நகரைச் சேர்ந்த சுப்பையன் மகன் கருத்தபாண்டி (31) பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது, காரணம்பேட்டையில் இருந்த டிப்பர் லாரி பல்லடம் நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. லாரி கட்டுப்பாட்டை இழந்து கருத்தபாண்டி மீது மோதி, சக்தி குமரேசகிருஷ்ணன், ரகுபதி ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியது. கட்டுபாட்டை இழந்த நிலையில் அருகில் உள்ள மின் கம்பத்தை உடைத்து கொண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிலத்துக்குள் புகுந்து நின்றது. லாரி ஓட்டுநர் தப்பி ஒடிவிட்டார். 
இவ்விபத்தில், சம்பவ இடத்திலேயே சக்தி குமரேச கிருஷ்ணன் உயிரிழந்தார். காயமடைந்த கருத்தபாண்டி திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், ரகுபதி கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.