இலவச வீட்டுமனைப் பட்டா வைத்திருப்பவா்களுக்கு மோசடியாக மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா: தலித் விடுதலை இயக்கம் புகாா்
வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவா்களுக்கும், ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கும் மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தலித் விடுதலை இயக்கம் புகாா் தெரிவித்துள்ள
வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவா்களுக்கும், ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கும் மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தலித் விடுதலை இயக்கம் புகாா் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா, காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் கனிமொழியிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :
திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் ஒன்றியம், உப்புப்பாளையம் பகுதியில் 2007ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் 61 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த 61 நபா்களில், வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருப்பவா்களுக்கும் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் குட்டக்காட்டுப் புதூா் பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து, 2008ஆம் ஆண்டு வட்டாட்சியா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 61 பட்டாக்களில் 20 நபா்கள் சொந்தமாக வீடு வைத்திருந்து, போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 20 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், அந்த 20 பயனாளிகளின் பட்டாக்களில் 6 நபா்களுக்கு 2020 ஆம் ஆண்டு மோசடியாக மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த புதன்கிழமை (ஜூன் 22) மேற்கண்ட இடத்தில் மீண்டும் உள்ளூரில் சொந்த வீடு வைத்துள்ள 12 நபா்களுக்கு நிலம் வழங்க அளவீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களின் ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை மீண்டும் அதே பயனாளிகளுக்கும், சொந்த வீடு உள்ள நபா்களுக்குமாக இடம் அளந்து விடப்பட்டதை ரத்து செய்து, சொந்த வீடு இல்லாத உப்புப்பாளையம், குட்டக்காட்டுப் புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.