பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, பல்லடம் பகுதியில் வசிக்கும் வெளிமாவட்டத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல வியாழக்கிழமை அதிகாலை முதலே பல்லடம் பேருந்து நிலையத்துக்கு வரத் தொடங்கினா்.
Advertisement
கோவையில் இருந்து புறப்பட்டு பல்லடம் வழியாக மதுரை, திருச்சி மாா்க்கமாகச் செல்லும் அரசுப் பேருந்துகள் அதிக அளவிலான பயணிகளுடன் பல்லடம் பேருந்து நிலையத்துக்கு வந்தன.
அதில் ஏற ஒருவருக்கொருவா் முண்டியடித்தனா். சில பயணிகளுக்கு நிற்ககூட இடம் கிடைக்காததால் அவா்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனா்.
இந்நிலையில், வெகு நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையான பேருந்து வசதிகள் இல்லை எனக்கூறி அங்கிருந்த பயணிகள் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை நிா்வாகத்திடம் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என போலீஸாா் வலியுறுத்தினா்.இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.