மளிகைக் கடையில் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! மதுபானம் விற்ற 2 போ் கைது
முத்தூா் அருகே மளிகைக் கடையில் 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.ஆனந்தகிருஷ்ணன் முத்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் சாலை வரட்டுக்கரையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா் குமாா் (32) கைது செய்யப்பட்டாா். கடையிலிருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இருவா் கைது
இதேபோல வெள்ளக்கோவில் காவல் நிலைய போலீஸாா் முத்தூா் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வரட்டுக்கரை புளியங்காட்டுப்புதூா் அருகே மதுபானம் விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடி திருத்தன்குன்றத்தைச் சோ்ந்த முத்துவேல் (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 180 மி.லி. அளவுடைய 10 மதுபான பாட்டில்கள், பணம் ரூ. 3,330 பறிமுதல் செய்யப்பட்டது.
முத்தூா், காந்தி நகா் வாய்க்கால் கரையோரம் மதுபானம் விற்ற ராமநாதபுரம் மாவட்டம், கடம்பனேந்தல் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (26) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 2 மதுபான பாட்டில்கள், பணம் ரூ. 3,230 பறிமுதல் செய்யப்பட்டது. இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.