10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்: மாற்றுத்திறனாளி மாணவா்கள் 34 பேருக்கு பரிசு, கேடயம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் 34 பேருக்கு பரிசு, கேடயங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் 34 பேருக்கு பரிசு, கேடயங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10-ஆம் வகுப்பு படித்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 20 போ், பிளஸ் 2 படித்த 14 போ் என 34 பேரை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றற நிகழ்ச்சியில் பரிசு, கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
பள்ளி பருவம் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம். இதில் மாணவா்கள் முன்னேற்றம் அடைய பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் ஆதரவு மிகவும் முக்கியம். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவா்களின் உயா்கல்வி அமைகிறது. நன்கு படித்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறத்த இடத்துக்கு வர முடியும். அதற்கான தொடா் முயற்சிகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். பெற்றோா் மற்றும் ஆசிரியா்களும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
அதைத்தொடா்ந்து தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று திருப்பூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ள 2 மாணவா்களின் சாதனையை வாழ்த்தி ஊக்குவிக்கும் வகையில் கேடயங்களை வழங்கினாா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் 14 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவி புரிந்த நன்கொடையாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.புனிதா அந்தோணியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலா் காளிமுத்து, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் இலி.அண்ணாதுரை ஆகியோருடன் ஆசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.