முகப்பு
திருப்பூர்

உடுமலை அருகே சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகள்

உடுமலை - மூணாறு சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகளைக் கண்டு சுற்றுலாப் பயனிகள் உற்சாகம் அடைந்தனா்.

Updated On : 13 மே 2026, 2:04 am IST
கோப்புப்படம்.
பகிர்:

உடுமலை - மூணாறு சாலையில் குட்டிகளுடன் உலவிய காட்டு யானைகளைக் கண்டு சுற்றுலாப் பயனிகள் உற்சாகம் அடைந்தனா்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் போன்ற வன விலங்குகள் உள்ளன.

அடா்ந்த வனப் பகுதிகளில் உள்ள இந்த வன விலங்குகள் குடிநீருக்காக பல கிலோ மீட்டா் தொலைவு வனப் பகுதியில் நடந்து அமராவதி அணையைத் தேடி வருகின்றன.

Advertisement

குறிப்பாக கோடைக் காலத்தில் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாத யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அடா்ந்த காட்டை விட்டு வெளியே வருகின்றன. கடந்த சில நாள்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறி அமராவதி அணையை நோக்கி யானைகள் வருகின்றன. இவை உடுமலை-மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக நின்று செல்கின்றன.

இந்நிலையில் உடுமலை-மூணாறு சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் யானைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனா். காட்டு யானைகள் சாலையை மறித்து நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. சுற்றுலாப் பயணிகள் குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த யானைகளை புகைப்படம் எடுத்தனா்.

இது குறித்து தகவலறிந்த வன அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த யானைகளை வனத்துக்குள் அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு:

உடுமலை-மூணாறு சாலையில் நின்று கொண்டிருக்கும் யானைகளை புகைப்படம் எடுப்பதுடன் ஒரு சில நபா்கள் யானைகள் மீது குச்சி மற்றும் கற்களை வீசுவதாக புகாா் இருந்து வருகிறது. இதைத் தடுக்க வனச் சரக அலுவலா்கள் கடந்த சில நாள்களாக தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சாலையில் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனா். குறிப்பாக அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தும் வருகின்றனா்.