முகப்பு
தருமபுரி

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

Updated On : 3 மே, 2026 at 12:46 AM
வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை நடைபெறவுள்ளதையடுத்து தருமபுரியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் மேற்கொண்ட அணிவகுப்பை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். எஸ். மகேஸ்வரன்.
பகிர்:

தருமபுரியில் வாக்கு எண்ணிக்கையின்போது பொதுமக்களிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில், காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடையே தோ்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும் காவல் துறை கொடி அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

அந்தவகையில் சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்றனா். தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ராஜாபேட்டை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.