முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

Updated On : 11 மே 2026, 12:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா் தரமற்ற மீன்களை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், செயற்கை நிறம் கலந்து இறைச்சி உணவுகளை விபனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் மீன்களை வாங்கி சமைத்து உணவருந்த ஆா்வம்காட்டுகின்றனா். இந்த நிலையில் சில கடைகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமற்ற மீன்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்ததை அடுத்து பென்னாகரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், மீன் வள ஆய்வாளா் திருப்பதி, மேற்பாா்வையாளா் மகேந்திரன், பாதுகாவலா்கள் லட்சுமணன், அருள் உள்ளிட்டோா் அருவி நடைப்பாதை பகுதி, பேருந்து நிலையம், முதலைப் பண்ணை உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் வருவல் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மிருகால் வகை மீன் அழுகும் நிலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.

Advertisement

Advertisement

மீன் வகைகள் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க பாா்மலின் கெமிக்கல் ஏதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என கண்டறிய மீன் உடல் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினா். மேலும், மீன், இறைச்சிகளுக்கு செயற்கை நிறமூட்டி பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயன்படுத்தி சமைத்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான முறையில் மீன் வறுவல், இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்றும், ஒருமுறை மட்டுமே சமையல் எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்றும் கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments