"வேலை தேடி வெளியூர் செல்வதை தடுக்கும் வகையில் அரசு திட்டங்கள் தேவை'
வேலை தேடி தருமபுரி மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை
வேலை தேடி தருமபுரி மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, கம்பைநல்லூரில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா, பேருந்து நிலையத்தில் மேற்கூரை வசதிகள் செய்வதற்கான பூமி பூஜை ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன. விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியது -
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 2 லட்சம் பேர் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் போதிய அளவில் நீர்வளம், பருவ மழை இல்லாததால் விவசாயப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயப் பணிகளை மேம்படுத்தும் வகையில், காவிரி உபரி நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்காக தமிழக அரசு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம்.
கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் பயன் பெறும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியது :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையாகும். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.காளிதாசன், செயல் அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.